மக்களவைத் தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன்.
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தேர்தல் பணியாற்றவுள்ள மண்டல அலுவலர்களுக்கும் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி அளவிலான பயிற்றுநர்களுக்கும் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பைத் தொடக்கி வைத்து மேலும் அவர் பேசியது:
வரும் மக்களவை பொதுத்தேர்தல்-2019ல் வாக்குச்சாவடி மைங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து மண்டல அலுவலர்களுக்கும் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி அளவிலான பயிற்றுநர்களுக்கு பயிற்சி அளிக்கவே இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது.
தற்போது வழங்கப்படும் கருத்துகளை கவனமாக கேட்டு நீங்கள் அனைவரும் உங்கள் மண்டலத்திற்குட்பட்ட, சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு விரிவாக எடுத்துரைக்க வேண்டும்.தேர்தலில் பயன்படுத்தப்படும் பொருட்கள் குறித்தும், தேர்தல் நாளன்று செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும், இந்தத் தேர்தலில் புதிதாக பயன்படுத்தப்படவுள்ள வாக்களித்தமைக்காக ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரம் குறித்தும் இந்தப் பயிற்சியில் விரிவாக எடுத்துரைக்கப்படவுள்ளது.
நாம் அனைவரும் நமது இந்தியத் திருநாட்டின் மிகப்பெரிய ஜனநாயக நடைமுறையில் நாமும் பங்கெடுக்க உள்ளோம் என்ற அர்ப்பணிப்புடன் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்றார்.
பயிற்சியில் குளித்தலை கோட்டாட்சியர் லியாகத் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளை சேர்ந்த 91 மண்டல அலுவலர்கள், சட்டப்பேரவைத் தொகுதி அளவிலான பயிற்றுநர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர்கள் பங்கேற்றனர்.