மக்களவைத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்கும் எனக் கூற முடியாது என்றார் மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை.
கரூர் மாவட்டம், சீத்தப்பட்டி காலனியில் வெள்ளிக்கிழமை பொதுமக்களிடம் குறைகேட்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மேலும் கூறியது:
தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுதான் யார் வேட்பாளர் என்பதை முடிவு செய்யும். எனது மக்களவை உறுப்பினர் பணியை, கடமையைச் செய்து கொண்டிருக்கிறேன். தேர்தல் அறிவிக்கப்படவில்லை. தேர்தலுக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். எனக்குத்தான் சீட் கொடுப்பார்கள் என்பது உறுதி கிடையாது. நானும் விருப்ப மனு அளித்துள்ளேன்.
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தைக்கு கரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கொடுக்கப்பட்டால், அவரது வெற்றிக்கு உழைப்பேன். இதில் கருத்து வேறுபாடு எதுவும் கிடையாது. மக்களவையில் தமிழர்களின் உரிமை காக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பினோம். அதற்கும் தேர்தல் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. திருப்பூரில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரு கலப்படம் என கூறியிருப்பது, ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள கொள்கையை நினைத்து அவ்வாறு கூறியிருக்கலாம், பொதுவாக தேர்தல் என்றாலே கலப்படம்தான் என்றார் அவர்.