கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் , ரூ.25லட்சம் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கான பூமி பூஜையை மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.
இத்தொகுதிக்குள்பட்ட எஸ். வெள்ளாளப்பட்டி வார்டு எண் 34 -இல் ரூ.15 லட்சம் மதிப்பில் 1லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, ரூ.10 லட்சம் மதிப்பில் மழைநீர்
வடிகால் மற்றும் சிமென்ட் தளம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜைகள் தொடக்கி வைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து எஸ். வெள்ளாளப்பட்டி ஆதிதிராவிடர் காலனி, ஆர்.எஸ். புதூர், சிலோன் காலனி மற்றும் எ.வி.பி. நகர் பகுதிகளில் பொதுமக்களின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று கோரிக்கை மனுக்களை தம்பிதுரை பெற்றுக் கொண்டார்.
சட்டப்பேரவை உறுப்பினர் எம்.கீதாமணிவண்ணன், நகராட்சி பொறியாளர் நக்கீரன், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் ஏ.ஆர். காளியப்பன், பசுவை சிவசாமி, கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.