தேசிய விளையாட்டுகளில் பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்க உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2018-2019-ம் கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் தமிழகத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலை மற்றும் கல்லூரி, பல்கலைக் கழகத்தில் பயிலும் தலைச்சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் ஊக்க உதவித் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஆணையத்தின் இணையதளம் (www.sdat.tn.gov.in) மூலம் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ரூ. 10,000, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு ரூ. 13,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும். 1.7.2017 முதல் 30.6.2018 வரையிலான காலகட்டத்தில் தேசியளவில் நடைபெற்ற குழு, தனி விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். குழுப் போட்டிகளாயின் முதல் இரு இடங்களையும், தனிநபர் போட்டிகளாயின் முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். தேசியளவிலான போட்டிகள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டுகள் கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு ஆணையம், மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் அகில இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் ஆகியவற்றினால் நடத்தப்பட்டிருக்க வேண்டும். கடந்த 13-ம்தேதி முதல் விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த 7 நாட்களுக்குள் தங்களது அசல் சான்றிதழை சம்பந்தப்பட்ட மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் சரிபார்த்தலுக்காக காண்பிக்க வேண்டும். வரும் மார்ச் 12 -க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.