குப்பம் பெரியகாண்டியம்மன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
கரூர் மாவட்டம், க. பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட குப்பம் கிராமத்தில் உள்ள அம்மன் தமோ குணத்தில் பகவதியாகவும், ரஜோ குணத்தில் துர்க்கையாகவும், சத்துவ குணத்தால் அம்பாளாகவும், 64 கலை வடிவங்களாகவும், 84 லட்சுமி யோனி பேதங்களாகவும், 64 கலை உபசார பூஜைக்கு உரியவளாகவும் திகழ்கிறார். அம்மனுக்கும், இந்தக் கோயிலில் விநாயகர், குன்னுடையான், பொன்னர், சங்கர், தங்காயி ஏழு கன்னிமார் ஆகிய சுவாமிகளுக்கும் தினமும் ஒரு கால பூஜைகளும் அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட முக்கிய விரத நாட்களில் சிறப்பு வழிபாடும் நடைபெறுகிறது.
இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி 10-ம் தேதி மஹா பூஜை சிறப்பு வழிபாடு நடைபெறும்.
வெள்ளிக்கிழமை மாசி 10-ம் தேதியை முன்னிட்டு கோயிலுக்கு காலை 7மணிக்கு பால்குடம், நீர் குடம், மஞ்சள் குடம் போன்றவை பக்தர்களால் கொண்டு வரப்பட்டு, 18 வகை மூலிகை பொருட்களால் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து தீபாராதனையும், மாவிளக்கு வழிபாடும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.