கரூர் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் ரூ.69.27 கோடியில் வளர்ச்சிப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மாவட்டத்திலுள்ள கிராமங்களுக்கு நேரில் சென்று, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று, அதன் அடிப்படையில் தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை தலைமை வகித்தார். ஆட்சியர் த. அன்பழகன் முன்னிலை வதித்தார். இக்கூட்டத்தில்,
கடந்த 5 மாதங்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் சாலை வசதி, கழிவுநீர்வாய்க்கால், குடிநீர் வசதி, தானியக்களம் கட்டுதல், பேவர்பிளாக் சாலை அமைத்தல் உள்ளிட்ட 448 பணிகள் ரூ.69.27கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்ட்டது.
மீதமுள்ள மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுத்து பணிகளை தொடங்கிடவும், ஏற்கனவே தொடங்கப்பட்ட பணிகளை விரைந்து முடித்திடவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம். கீதா மணிவண்ணன்,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் உமாசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.