கரூர் மாவட்டம், தாதம்பாளையம் ஏரிக்குத் தண்ணீர் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தேர்தலை புறக்கணிப்போம் என்றார் தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பொ. அய்யாக்கண்ணு.
க.பரமத்தி அருகிலுள்ள ஆரியூரில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
மழைக்காலங்களில் அமராவதி ஆற்றில் வரும் உபரிநீரை சின்னதாராபுரத்தில் உள்ள அணைப்புதூர் தடுப்பணையில் இருந்து ஏற்றம் செய்து, ஆரியூர், தொட்டிவாடி வழியாக தாதம்பாளையம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்து
நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில், விவசாயிகள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும். அதற்கான நிலை ஏற்படும்.
தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகும் நீரில் பெரும்பாலானவை கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது. இதனால்தான் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு குறைவாக உள்ளது. இந்த நீரை தமிழகம் நோக்கி திருப்பிவிடப்பட்டால் நாட்டிற்கே நாம் சோறுபோட முடியும்.
தமிழக முதல்வராக இருந்த காமராஜர் கன்னியாகுமரி மாவட்டத்தை கேரளாவில் இருந்து பிரித்து,தமிழகத்துடன் இணைத்துக்கொண்டு தமிழகத்தில் இருந்த பாலக்காட்டை கேரளத்துக்கு விட்டுக்கொடுத்ததால் பெரும்பாலான
நீர்வளம் கேரளத்திற்குச் சென்றுவிட்டது என்றார் அய்யாக்கண்ணு.