அரசு அலுவலர்கள், வாக்காளர்கள் ஆகியோர் தேர்தல் நடைமுறையை நன்கு அறிந்து கொள்ளவே வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு மன்றத்தை சனிக்கிழமை தொடக்கி வைத்து அவர் மேலும் கூறியது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி, கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலகங்களிலும் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம் தொடங்கப்படுகிறது. இந்த மன்றம் மூலமாக விவாதங்கள் நடத்தப்படுவது, தேர்தல் குறித்து வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஏதுவாக அமையும்.
இந்த மன்றத்தில் அந்தந்த துறையின் தலைமை அலுவலர், வாக்காளர் விழிப்புணர்வு மன்ற ஒருங்கிணைப்பு அலுவலராகவும், மற்றவர்கள் உறுப்பினர்களாக செயல்படுவர். இந்த மன்றம் மூலம் தங்கள் பணியிடங்களில் உள்ள ஊழியர்களும், உறுப்பினர்களும் தேர்தல் நடைமுறைகளை நன்கு தெரியக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
வாக்காளர்கள் தங்களின் விவரங்களைத் தெரிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள இணையதளத்தின் பயன்பாடு மற்றும் வாக்காளர் உதவி மைய எண் 1950 ஆகியவற்றின் மூலம் வாக்காளர்கள் தங்கள் பெயர் மற்றும் பிற விவரங்களை தெரிந்துகொள்ளும் வசதிகள் குறித்து வாக்காளர்களிடம் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாக்காளர் விழிப்புணர்வு மன்றங்களின் மூலம் அனைத்து துறைகளிலும் உள்ள அலுவலர்கள், தேர்தல் நடைமுறையை நன்கு அறிந்துகொள்ள வேண்டும்.
அப்போதுதான் வாக்காளர்களின் அதிகபட்ச பங்களிப்பின் மூலமாக ஆரோக்கியமான ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியும். அதற்கு அலுவலர்கள் வாக்காளர் விழிப்புணர்வு மன்றத்தை நல்ல முறையில் பயன்படுத்திட வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு மன்றத்தின் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.