கரூர் மாவட்டம், வெங்கமேடு அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் ஆசிரியர், பொறியியல் மாணவர் உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரைச் சேர்ந்தவர் ஆசிரியர் முரளிதரன் (31). மீனவர் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் சந்தோஷ் (19). இவர், நாமக்கல் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவர்கள் இருவரும் கரூரிலுள்ள உறவினர் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டு, மீண்டும் பரமத்திவேலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு இவர்கள் கரூர்- சேலம் பழைய தேசிய நெடுஞ்சாலையில் ராம்நகர் அருகே சென்ற போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த முரளிதரன், சந்தோஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். வெங்கமேடு போலீஸார் வழக்குப் பதிந்து கார் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.