கரூர் மாவட்டம், வெள்ளியணை பெரியகுளத்துக்கு நீர் நிரப்ப நடவடிக்கை என்று விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், வெள்ளியணை தென்பாகம் மேட்டுப்பட்டி கிராம மக்கள் ஆட்சியர் த.அன்பழகனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பது: எங்கள் பகுதியில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முழுமையாக விவசாயத்தை நம்பியே வாழ்கிறோம். வறட்சி காரணமாக வெள்ளியணை பெரியகுளத்தில் தண்ணீரே இல்லை. எனவே, காவியாற்றில் வீணாகி, கடலில் கலக்கும் நீரை, ராட்சத குழாய் மூலம் குளத்திற்கு கொண்டு வந்து சேர்த்து, விவசாயத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
248 மனுக்கள் அளிப்பு: முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த 248 மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய தீர்வு காண உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) செல்வசுரபி, மக்கள் குறைகேட்பு தனித்துணை ஆட்சியர் கே.மீனாட்சி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நல அலுவலர் கணேஷ் உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.