கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்தின் நிறுவனரும்-தலைவருமான ஜே. ஜோதிகுமார் புதன்கிழமை மனுதாக்கல் செய்தார்.
மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஏப்.18 ஆம் தேதி நடைபெறஉள்ள தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கினாலும் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.
இந்த நிலையில், கரூர் தொகுதியில் போட்டியிட புதன்கிழமை காலை, பரமத்திவேலூரைச் சேர்ந்த தேசிய உழவர் உழைப்பாளர் கழக நிறுவனரும்- தலைவருமான ஜே. ஜோதிகுமார் தனது மனுவை மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான த. அன்பழகனிடம் தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக கே. பழனிசாமி மனுவைத் தாக்கல் செய்தார்.
5 தொகுதிகளில் போட்டி : கரூர், திருச்சி, திருப்பூர், வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய 5 தொகுதிகளில் எங்கள் கட்சி போட்டியிடுகிறது. கரூரில் முருங்கைக்காய் விவசாயிகளுக்கு முருங்கைபவுடர் தொழிற்சாலை ஏற்படுத்துவோம் என்றார் தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்தின் நிறுவனரும்- தலைவருமான ஜே. ஜோதிகுமார். பேட்டியின்போது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.