கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காவல்நிலையத்தை கட்சிசார்பற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலாயுதம்பாளையம் அடுத்த பொன்னியகவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் வீராசாமி(55). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் நீரா பானம் இறக்கி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், புதன்கிழமை மாலை அங்கு சீருடையின்றி வந்த வேலாயுதம்பாளையம் போலீஸார் மாமூல் கேட்டு மரத்தில் கட்டியிருந்த பானைகளை கற்களை வீசி உடைத்தார்களாம்.
தகவலறிந்த கட்சி சார்பற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் பாபு தலைமையில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வியாழக்கிழமை வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த காவல் ஆய்வாளர் வேலுசாமி பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் கலைந்து சென்றனர்.
இதுதொடர்பாக கட்சி சார்பற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் பாபு கூறியது:
தமிழக அரசு நீரா பானம் இறக்கி விற்க அனுமதித்துள்ளது. மாமூல் தரவில்லை எனப் போலீஸார் வீராசாமி தோட்டத்திற்குள் புகுந்து பானைகளை உடைத்திருப்பதை கண்டிக்கிறோம். கரூரில் 24 மணி நேரமும் மது விற்பனை நடக்கிறது. இதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்காமல், விவசாயிகளை இனி துன்புறுத்தினால் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார் அவர்.