தலையில் கல்லைப் போட்டு தொழிலாளியை கொலை செய்த நண்பரை போலீஸார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அடுத்த போகநல்லூர் சுந்தரேசபுரத்தைச் சேர்ந்தவர் இசக்கிபாண்டியன்(45). திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள்மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(32). இவர்கள் இருவரும் கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே பஞ்சையன்குட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் கிரஷரில் கல் உடைக்கும் தொழிலாளர்களாக வேலைப்பார்த்து வந்தனர். இசக்கிபாண்டியனின் செல்பேசியை செல்வராஜ் திருடியதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், புதன்கிழமை இரவு மது போதையில் வந்த இசக்கிபாண்டியனுக்கும், செல்வராஜூக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ், இசக்கிபாண்டியன் தலையில் கல்லைப் போட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு வந்த வேலாயுதம்பாளையம் போலீஸார் சடலத்தை குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து செல்வராஜைக் கைது செய்தனர்.