ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் திருட்டு
பெரம்பலூரில், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் திருடுபோனது புதன்கிழமை காலை தெரியவந்தது.
பெரம்பலூர் கல்யாண் நகரைச் சேர்ந்தவர் ரெட்டிங்ராஜ் (60). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான இவர், தனது மனைவி எலிசாவுடன், அமெரிக்காவில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், ரெட்டிங்ராஜ் வீட்டில் வைத்திருந்த ஏ.டி.எம் கார்டு மூலம் ரூ. 20 ஆயிரம் பணம் எடுத்ததாக, அவரது செல்லிடபேசிக்கு குறுஞ்செய்தி வந்ததாம். இதனால் சந்தேகமடைந்த ரெட்டிங்ராஜ், தனது வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வீட்டைப் பார்வையிடுமாறு கூறினாராம்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பொருள்கள் திருடப்பட்டதும், பீரோவில் இருந்த ஏ.டி.எம் கார்டை திருடிய மர்ம நபர்கள், அதில் குறிப்பிட்டிருந்த பின் நம்பர் மூலம் ரூ. 20 ஆயிரத்தை எடுத்ததும் தெரியவந்தது. தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து அவரது மற்றொரு மகன் ஜோஸ்சபரிராஜன் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். வீட்டில் திருடுபோனவற்றின் விவரம், ரெட்டிங்ராஜ் பெரம்பலூருக்கு வந்த பிறகே தெரியும்.