பெரம்பலூரில், தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 13 லட்சம் மதிப்பிலான நகை, வெள்ளிப் பொருள்கள், ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது புதன்கிழமை இரவு தெரியவந்தது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகச் சாலையில் வசித்து வருபவர் ராம்குமார் (37). இவர், தொழில் ரீதியாக கடந்த சில நாள்களுக்கு முன் வெளிநாடு சென்றார். வீட்டில் இருந்த அவரது மனைவி கெளதமி (31), திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற திருமணத்துக்குச் சென்றுவிட்டு, இரவு 9 மணியளவில் திரும்பி வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, 35 பவுன் நகை, அரை கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ. 1.75 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது. தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். புகாரின்பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.