பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இரு சாலை விபத்துகளில் 7 பேர் காயமடைந்தனர்
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள டி.வி. புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டியன் (48). இவர் தனது ஆட்டோவில் அகரம் சீகூரிலிருந்து கீழப்பெரம்பலூர் கிராமத்துக்கு 5 பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தார். கருப்பட்டாங்குறிச்சி கிராமம் அருகே வந்தபோது, அவ்வழியே சுண்ணாம்புக் கல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி மோதி ஆட்டோவில் பயணித்த ஓட்டுநர் வீரபாண்டியன், அமுதா (62), ஜெகதாம்பாள் (55), சோமு (65), வசந்தா (40) அம்சவள்ளி (50) ஆகியோர் காயமடைந்து, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.குன்னம் போலீஸார் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநர் தஞ்சாவூரை சேர்ந்த கார்த்திக்கை (32) கைது செய்து விசாரிக்கின்றனர்.
பால் வண்டி, மோட்டார் சைக்கிள் மோதல்: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார் (30).
இவர், குன்னம் பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா நகர் நோக்கி மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் பங்க் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, அரியலூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி பால் வேன் மோதி பலத்த காயமடைந்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குன்னம் போலீஸார் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநர் துறையூரை சேர்ந்த அமுதாஞ்சனை (29) கைது செய்தனர்.