பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே, கடன் தொகையை செலுத்தாததால் பூட்டிய வீட்டைத் திறந்து விட நடவடிக்கை எடுக்கக்கோரி, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
குன்னம் வட்டம், பெருமத்தூர் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து- கொளஞ்சி மகன் தனசேகர் (16). அதே கிராமத்தைச் சேர்ந்த, அவர்களது உறவினரான செல்லமுத்து மனைவி சின்னப் பொண்ணுவிடம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தனது வீட்டை அடமானம் வைத்து ரூ. 2.50 லட்சம் செல்லமுத்து பெற்றாராம். வாங்கிய கடன்தொகைக்கு 2 சதவீதம் வட்டியுடன் செலுத்த வேண்டும் என்பது நிபந்தனையாம்.
கடன் தொகையை திரும்ப செலுத்தமுடியாததால் இடத்தையும், வீட்டையும் விலைக்கு கொடுத்துவிடு என சின்னப்பொன்னு கேட்டதற்கு, செல்லமுத்து ஏற்றுக்கொண்டாராம்.
இந்நிலையில், நிலம் வேண்டாம் வாங்கிய தொகையை வட்டியுடன் ரூ. 7 லட்சம் தரவேண்டும் என சின்னப்பொண்ணு கூறியதற்கு, செல்லமுத்து மறுப்பு தெரிவித்தாராம். இதையடுத்து, பணத்தை பெற்றுத்தரக்கோரி கடந்த 3 மாதங்களுக்கு முன் மங்களமேடு காவல் நிலையத்தில் சின்னப்பொன்னு புகார் அளித்தாராம்.
போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையில், சின்னப்பொண்ணுவுக்கு 3 மாதத்தில் வட்டியுடன் ரூ. 7 லட்சம் பணத்தை வழங்க வேண்டுமென, எழுத்துபூர்வமாக செல்லமுத்து எழுதிக்கொடுத்தாராம். ஆனால், உரிய காலத்தில் பணத்தை கொடுக்க முடியாததால், கால அவகாசம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கு மறுப்பு தெரிவித்த சின்னப்பொண்ணு, திங்கள்கிழமை காலை செல்லமுத்து வீட்டைப் பூட்டிவிட்டாராம். இதனால் பாதிக்கப்பட்ட செல்லமுத்து, அவரது மனைவி கொளஞ்சி, மகன் தனசேகர் ஆகியோர் வசிக்க வீடு இல்லாமல் தெருவில் தங்கியுள்ள நிலை ஏற்பட்டுள்ளதால், பூட்டிய வீட்டை திறந்து விட காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு அளித்தனர்.