பெரம்பலூர் மாவட்டம், நக்கசேலம் கிராமத்தில் உள்ள குளத்தில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலத்தூர் வட்டத்துக்குள்பட்ட நக்கசேலம் வருவாய் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நாரைக்கிணறு குளம் உள்ளது. இந்தக்குளம் பல ஆண்டுகளாக அப்பகுதியைச் சேர்ந்த சிலரால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த நீர் நிலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, கிராம மக்கள் வருவாய் கோட்டாட்சியரிடம் பலமுறை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. வருவாய்த்துறையினர் கள ஆய்வு செய்து நாரைக் கிணற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பொது பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.