பெரம்பலூரில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க கவன ஈர்ப்புப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் பொன். ஆனந்தராசு தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஆ. அமுதா பேரணியைத் தொடக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் வாசு. கொளஞ்சி கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்க உரையாற்றினார்.
பேரணியில், சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சட்ட ரீதியான ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணிக்கொடை ரூ. 5 லட்சமும், சமையலர்கள், சமையல் உதவியாளர்களுக்கு பணிக்கொடை ரூ. 3 லட்சமும் வழங்க வேண்டும். ஒரு மாணவருக்கு உணவு செலவினம் ரூ. 5 வழங்க வேண்டும். சத்துணவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பெரம்பலூர் பாரத ஸ்டேட் வங்கி கிளை எதிரே தொடங்கிய இப் பேரணி வெங்கடேசபுரம் வழியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் நிறைவடைந்தது. பேரணியில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி. தயாளன், மாவட்டச் செயலாளர் ப. குமரி அனந்தன், மாவட்டப் பொருளாளர் சிவக்குமார், சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், சின்னதுரை, அருள்ஜோதி உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.