இயலாதவர்களுக்கு தங்களால் முடிந்த உதவி செய்ய முன்வர வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
பெரம்பலூர் புறநகர்ப் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள அன்பகம் மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளியில், ஹேப்பி டீம் 2.0 என்னும் வாட்ஸ் அப் சமூக வலைதள சேவைக்குழுவின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் 6-வது சேவை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் மேலும் பேசியது: சமூக வலைதளங்களை பலர் தேவையற்ற செயலுக்காக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பெரம்பலூரில் ஹேப்பி டீம் 2.0 என்னும் வாட்ஸ் அப் சமூக வலைதளம் ஏற்படுத்தி, அதன்மூலம் தங்களால் இயன்ற சேவைகளை செய்து வருகின்றனர். இதேபோல, தங்களால் முடிந்த உதவியை இயலாதவர்களுக்கு செய்ய முன் வரவேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, களரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் பயிலும் மாணவர் நிரஞ்சனுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ. 50 ஆயிரமும், அன்பகம் மனவளர்ச்சி குன்றியோர்களுக்கான சிறப்பு பள்ளியில் பயிலும் 50 மாணவர்களுக்கு பை ஆகியவற்றை வழங்கினார் ஆட்சியர் சாந்தா.
நிகழ்ச்சியை, ஆசிரியர் ராசபாண்டியன் தொகுத்து வழங்கினார். இதில், அரிமா சங்க சாசனத் தலைவர் மு. ராஜாராம், ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் செயலாளர் எம்.எஸ். விவேகானந்தன்உள்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் சீனிவாசன் வரவேற்றார்.