பிறர் நலனுக்காக வாழ்ந்தவர்கள் என்றும் வாழ்கிறார்கள் என்றார் அரியலூர் அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் க. தமிழ்மாறன்.
பெரம்பலூர் பதியம் இலக்கியச் சங்கமம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சரங்கு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த அவர் மேலும் பேசியது:
மனமே அனைத்து செயல்களுக்கும் அடிப்படை. இது நம்மை அழைத்துச் செல்லும் குதிரை வண்டியை போன்றது. நமது கோபங்களுக்கு வேகத்தடை அமைப்பதோடு, தீய செயல்களுக்கு கல்லறை கட்ட வேண்டும். பிறருக்கு எந்தக் காயங்களையும் ஏற்படுத்தாமல், சின்னச் சின்ன உதவிகள் செய்யவேண்டும். வாழும் கொஞ்ச நாள்களில் நல்ல தோழனாக இருக்க வேண்டும்.
புதிய பாதைகளை உருவாக்கும் வரை, இயன்றவரை இறுதிவரை பயணிக்க வேண்டும். நதிபோல, இறுதிவரை பிறர்நலம் சார்ந்து வாழ்ந்தவர்கள் காலம்கடந்தும் வாழ்கிறார்கள். மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, அன்னை தெரஸா, டாக்டர் அப்துல்கலாம் போன்றோர் இதில் அடங்குவர். வாழ்க்கையில் துவண்டுவிடாமல் நதிபோல் நாம் ஓடிக்கொண்டிருக்க வேண்டும் என்றார் அவர்.
தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் த. மாரிமுத்து முன்னிலையில், தந்தை ஹேன்ஸ் ரோவர் கலைக் கல்லூரியின் வணிக மேலாண்மைத்துறை பேராசிரியர் முனைவர் க. மருததுரை, நீ நதிபோல் ஓடிக்கொண்டிரு என்னும் தலைப்பில் பேசினார்.
சித்த மருத்துவர் கோசிபா, சமூக ஆர்வலர் சாரங்கபாணி, வரலாற்று ஆய்வாளர் ஜெயபால் ரத்தினம், கவிஞர் தே. தேவன்பு, ஆசிரியர் அ. சுரேஷ்குமார், அரியலூர் அரசு கலைக் கல்லூரி ஆய்வியல் நிறைஞர் ஆய்வாளர் சிவாஜி, மாணவர்கள் விஜயரங்கன், சுகன்யா, சரண்யா ஆகியோரும் பேசினர்.
அரியலூர் அரசு கலைக் கல்லூரி இயற்பியல் துறை மாணவர் பிரசாந்த் வரவேற்றார். கவிஞர் செந்தில்குமரன் நன்றி கூறினார்.