பெரம்பலூரில் சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட சங்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 12 மற்றும் 13- ஆவது வார்டு பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக பொதுக் குழாய்களிலும், வீடுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, நகராட்சி அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்யவும், பாரபட்சமாக குடிநீர் விநியோகம் செய்யும் நபரை மாற்ற நடவடிக்கை எடுக்கக் கோரியும் சங்குப்பேட்டை பகுதியில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து பெரம்பலூர் போலீஸார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் அப்பகுதிக்குச் சென்று, மறியலில் ஈடுபட்ட மக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது . இதையடுத்து மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.