பெரம்பலூர் மாவட்ட பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் சார்பில் உலக சிந்தனை நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சாரண இயக்கத் தந்தை பேடன் பவல் பிறந்த நாளான பிப். 22 ஆம் தேதி உலக சிந்தனை நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, பெரம்பலூர் மாவட்ட பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் சார்பில் பெரம்பலூர்- துறையூர் சாலையில் உள்ள பாரத சாரணப் பயிற்சி மையத்தில் உலக சிந்தனை நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி, கலை, சமையல் திறன், முடிச்சுகள், முதலுதவி, கைவினைத் திறன், உடற்பயிற்சி, வினாடி- வினா, தேசிய சமுதாய பாடல்கள் உள்ளிட்ட திறன் போட்டிகளும், பள்ளிகளுக்கு இடையேயான சிந்தனை நாள் அணி போட்டிகளும் நடைபெற்றன. இதில், 15 பள்ளிகளைச் சேர்ந்த 6 சாரண அணிகளும், 9 சாரணிய அணிகளும் பங்கேற்றன. போட்டி நடுவர்களாக திருச்சி மண்டல சாரண ஒருங்கிணைப்பாளர் ஜம்ஷித் மொய்தீன்,செந்துறை கல்வி மாவட்டச் செயலர் சக்திவேல் ஆகியோர் செயல்பட்டனர். சாரண பிரிவில் பெரம்பலூர் புனித செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி முதலிடத்தையும், களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்றன. சாரணியர் பிரிவில் இரூர் அரசு உயர்நிலைப்பள்ளி முதலிடத்தையும், கிழுமத்தூர் மாதிரி மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்றன.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கு. அருளரங்கன் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதில் மாவட்ட அமைப்பு ஆணையர்கள் ராசு, சரோஜா உள்பட பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை, மாவட்ட சாரண செயலர் செல்வராஜ், மாவட்ட பயிற்சி ஆணையர்கள் சந்திரசேகர், தனலட்சுமி மற்றும் சாரண ஆசிரியர்கள் செய்தனர்.