பெரம்பலூர் மாவட்ட அளவில் பெண்களுக்கான கபடி போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மத்திய, மாநில அரசு மற்றும் பெரம்பலூர் மாவட்ட சமூக நலத் துறை சார்பில், வட்டார அளவிலான கபடி போட்டிகள் கடந்த 20 ஆம் தேதி நடத்தப்பட்டது. இப் போட்டியில் முதலிடம் பெற்ற அணிக்கு ரூ. 2 ஆயிரமும், இரண்டாமிடம் பெற்ற அணிக்கு ரூ. 1,500-ம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற அணியினருக்கு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ இரா. தமிழ்ச்செல்வன் தொடக்கி வைத்த போட்டியில், 8 அணிகளைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர். இதில், அரும்பாவூர் அணியினர் முதலிடமும், குரும்பலூர் அணியினர் இரண்டாமிடமும், கொளக்காநத்தம் அணியினர் மூன்றாமிடமும் பெற்றனர். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினருக்கு முறையே ரூ. 6 ஆயிரம், ரூ. 3,600, ரூ. 2,400 பரிசுத் தொகையும், கோப்பையும் வழங்கி பாராட்டினார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.