அடையாளம் தெரியாத வாகனம் மோதி மயில் சாவு
பெரம்பலூர் அருகே சனிக்கிழமை மாலை சாலையை தாழ்வாகப் பறந்து கடக்க முயன்ற ஆண் மயில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது.
பெரம்பலூர் மாவட்டம், வெண்பாவூர், சித்தளி, பேரளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காப்புக் காடுகள் உள்ளன. இங்கு ஏராளமான வன விலங்குகள் உள்ளன.
தற்போது நிலவும் கடும் வறட்சியால், வனப் பகுதிகளிலிருந்து வெளியேறும் வன விலங்குகள் தண்ணீருக்காக குடியிருப்புப் பகுதிகளிலும், சாலையோரங்களில் சுற்றித் திரிகின்றன. அப்போது, தெரு நாய்களாலும், சாலையைக் கடக்க முயலும்போது வாகனங்களில் சிக்கி உயிரிழக்கின்றன. இந்நிலையில், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், தண்ணீர்பந்தல் எனும் இடத்தில் சனிக்கிழமை மாலை சுமார் 2 வயதுடைய ஆண் மயில் ஒன்று மிகவும் தாழ்வாக பறந்து சென்றதாகத் தெரிகிறது.
அப்போது, அந்த வழித்தடத்தில் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது. தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட வனத்துறையினர் அங்கு சென்று, அந்த மயிலை மீட்டு கால்நடை மருத்துவரின் உதவியுடன் பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர்.