பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாட்டார்மங்கலம் கிராமத்தில் நீர்ச்செறிவு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஆடு வளர்ப்பு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நபார்டு வங்கி நிதியுதவியுடன், இந்திய கிராம முன்னேற்ற இயக்க அறக்கட்டளை சார்பில் நீர்ச்செறிவு மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, நாட்டார்மங்கலம் கிராமத்தில் நடைபெற்ற ஆடு வளர்ப்பு பயிற்சி முகாமை தொடக்கி வைத்தார் நபார்டு வங்கி துணை பொது மேலாளர் வீரா சங்கர். நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் நவீன்குமார் சங்கீதம், ஆண்கள் சுய உதவிக்குழுவினருக்கு சுழல் நிதியாக ரூ. 75 ஆயிரத்துக்கான காசோலை, தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி, பெரம்பலூர் மாவட்டம், நாட்டார் மங்கலத்தில் நீர்ச்செறிவு பகுதிக்கு ரூ. 77 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெறுகிறது என்றார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் சரவணஜெயம், வேளாண் ஆலோசகர் மாதவன் ஆகியோர் ஆடு வளர்ப்பு தொடர்பான பயிற்சி அளித்தனர். தொடர்ந்து, இப் பயிற்சியில் பங்கேற்ற 67 விவசாயிகளும் களப்பயணமாக கீழக்கணவாயில் உள்ள தனியார் ஆட்டுப் பண்ணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆடு வளர்ப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்திய கிராம முன்னேற்ற இயக்க அறக்கட்டளைத் தலைவர் பூமாலை வரவேற்றார்.