பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விடுபட்டுள்ள விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் திங்கள்கிழமை (பிப். 25) முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டம் 1.12.2018 முதல் அமல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருவாய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, ஒரு விவசாய குடும்பத்துக்கு ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் வீதம், மூன்று சம தவணைகளில் வழங்கும் திட்டமாகும். இத்திட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் 2 ஹெக்டேர் வரை விவசாய நிலம் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளிடமிருந்து, இதுவரை 63,251 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகவல் பதிவேற்றும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.
இத்திட்டத்தில், தகுதியுள்ள விடுபட்டுள்ள விவசாயிகளுக்கு திங்கள்கிழமை முதல் பிப். 27 ஆம் தேதி வரை விஏஓ அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில், இதுவரை விண்ணப்பம் அளிக்காத தகுதியுள்ள விவசாயிகள் தங்களது கணினி சிட்டா நகல், ஆதார் கார்டு நகல், குடும்ப அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் புகைப்படத்துடன் தங்கள் பகுதி விஏவை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். விடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது விண்ணப்பத்தை உறுதிமொழிப் படிவத்துடன் சமர்ப்பித்து இத்திட்டத்தில் பயனடையலாம்.