பெரம்பலூர் அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த கட்டடத் தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். பெரம்பலூர் அருகேயுள்ள தம்பிரான்பட்டி கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பழனியாண்டி மகன் பெரியண்ணன் (45). கட்டடத் தொழிலாளி. இவர், கடந்த 7 ஆண்டுகளாக தினந்தோறும் மது அருந்தி வந்துள்ளார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த
10 ஆம் தேதி மனமுடைந்து விஷம் குடித்தார். இதையடுத்து, அவரை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடையாளம் தெரியாதவர் சாவு: பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் சுமார் 45 வயதுடைய நபர் ஒருவர் சனிக்கிழமை மயங்கிக் கிடந்தாராம். இதையறிந்த சிலர், அவரை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர், பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்ற அவர் அங்கு உயிரிழந்தார். போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.