அரியலூர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டங்களில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 446 மனுக்கள் அளிக்கப்பட்டன.
அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்துக்கு, ஆட்சியர் மு. விஜயலட்சுமி தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த 231 மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன், சமூக பாதுகாப்புத் திட்டத் துணை ஆட்சியர் அ.பூங்கோதை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். பெரம்பலூரில் : பெரம்பலூர் ஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா கூட்டத்துக்குத் தலைமை வகித்து, முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், சுயத்தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, அடிப்படைத் தேவைகள், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த 215 மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உரிய விசாரணை நடத்தி தீர்வு காணுமாறும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் வே.சாந்தா உத்தரவிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, தனித்துணை ஆட்சியர் மனோகரன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பாரதிதாசன் உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.