புதுக்கோட்டை சிப்காட்டில் புயலால் சேதமடைந்த தொழில்நிறுவனத்தின் மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த இலங்கை அகதி சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.
திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் வினோத் (40). இவர் கஜா புயல் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் மேற்கூரையை சரிசெய்யும் பணிக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வந்து பணியாற்றிக் கொண்டிருந்தபோது கடந்த இரு நாட்களுக்கு முன்பு மேற்கூரையில் இருந்து தவறிவிழுந்து பலத்த காயமடைந்தார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட அவர் செவ்வாய்க்கிமை இரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வெள்ளனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.