அன்னவாசல் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை காவல் துறையினர் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்து ஓட்டுநர் இருவரைக் கைது செய்தனர்.
அன்னவாசல் அருகேயுள்ள திருநாடு வழியாக லாரிகளில் அனுமதியின்றி மணல் கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அன்னவாசல் காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 2 லாரிகளில் அனுமதி இல்லாமல் மணல் ஏற்றிவந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரியைப் பறிமுதல் செய்த போலீஸார் மேல் நடவடிக்கைக்கு இலுப்பூர் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்து லாரியை காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றனர். மேலும் லாரி ஓட்டுநர் கன்னியாகுமரியைச் சேர்ந்த கிருஸ்து ராஜன்(30), தனிஷ் ராஜ் மகன் பிஷூ(25) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.