கஜா புயல் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தி, இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட கந்தர்வகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிவாரணப் பணிகள் மிகவும் மந்தமாக நடப்பதாகவும், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையான குடிநீர், மின்வசதி அளிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும்,
மீட்பு பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தியும் இந்த முற்றுகைப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மேலும், கந்தர்வகோட்டை பகுதியில் சாலைகளில் சாய்ந்து கிடக்கும் மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவற்றால் போக்குவரத்து வசதியின்றி பொதுமக்கள் அன்றாடத் தேவைகளுக்கு வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலை இருப்பதால் சிரமப்படுகின்றனர். வீட்டின் ஓடுகள், கூரைகள் முற்றிலும் நாசமடைந்து வீட்டில் இருந்த பொருள்கள் சேதமடைந்திருக்கின்றன. இந்நிலையில், அரசு அதிகாரிகள் கிராமப் பகுதிகளில் எந்த ஒரு நிவாரணப் பணிகளும் மேற்கொள்ளவில்லை. ஜெனரேட்டர் உதவியுடன் குடிநீர் விநியோகிப்பதாகக் கூறி வந்த நிலையில், எந்தப் பணியும் செய்யவில்லை எனக் கூறி, கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு அலுவலர்கள் நாங்கள் சீரமைப்பு பணிகளை செய்து வருகிறோம். இன்னும் ஓரிரு நாளில் நிலைமை சீரடையும் எனத் தெரிவித்தனர். குடிநீர் வழங்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.