கஜா புயலின் தாக்கத்தினால் பெரும் பாதிப்புக்குள்ளான ஆலங்குடி பகுதியில் 5 ஆவது நாளாக மின்சாரம், குடிநீர் வசதியின்றி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
"கஜா' புயலின் கோரத் தாண்டவத்தில் வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆலங்குடி வட்டத்தில் பசுஞ்சோலையாக காணப்பட்ட வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், கீரமங்கலம், கீழாத்தூர், வானக்கண்காடு, புள்ளாண்விடுதி, அணவயல், செரியலூர் உள்ளிட்ட பகுதியில் லட்சக்கணக்கான மரங்கள் முறிந்துவிட்டன. சுமார் 2 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட வாழை, நெல், கரும்பு உள்ளிட்ட அனைத்து பயிர்களும் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இப்பகுதியில் இருந்த குடிசை, ஓடு வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன.
இந்நிலையில், புயல் பாதிப்புக்குள்ளாகி 5 நாட்களாகியும் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட எந்த உதிவியும் கிடைக்காமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அரசு உதவி கிடைக்காததால் ஆங்காகங்கே மக்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஆலங்குடி அருகேயுள்ள செம்பட்டிவிடுதியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல, ஆலங்குடி வட்டத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.