புதுக்கோட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் மீட்புப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது.
கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மின் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பணியாளர்கள் புதுக்கோட்டையில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கஜாவைத் தொடர்ந்து இன்னும் சில புயல்கள் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இதன்படி செவ்வாய்க்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் திடீர் மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த மழைநீடித்தது. இதனால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டன. இதே மழைச் சூழல் தொடர்ந்தால் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புதல் இன்னும் சில நாட்கள் ஆகலாம்.