புதுக்கோட்டையில் 1 லட்சம் பேரைத் திரட்டி என்னை வசைபாடிய டிடிவி தினகரனின் முகத்திரையைக் கிழிப்பேன் என்றார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.
புதுக்கோட்டை திலகர்திடலில், அண்ணா பிறந்தநாளையொட்டி நலிவடைந்த நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு பொற்கிழி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவில், 110 நாட்டுப்புற கலைஞர்களுக்கு பொற்கிழி வழங்கி அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பேசியது: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நலிவடைந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு பொற்கிழி வழங்கி கெளரவிக்கும் நிகழ்ச்சி இனி ஆண்டுதோறும் நடத்தப்படும். ஒரு வாரத்தில் புதுக்கோட்டையில் 1 லட்சம் பேரை திரட்டி போட்டிப் பொதுக்கூட்டம் நடத்தப்படும். அக்கூட்டத்தில் என்னை வசைபாடிய டிடிவி தினகரன் உள்ளிட்டோரின் முகத்திரையைக் கிழிப்பேன் என்றார்.
தொடர்ந்து, நாட்டுப்புற பாடகர்கள் செந்தில்கணேஷ், ராஜலெட்சுமி தம்பதிக்கு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றமைக்காக பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.விழாவில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே. வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.