கடந்த 5 மாதங்களாக ஆர்.சி.புத்தகம் வழங்காததைக் கண்டித்து அறந்தாங்கி ஆர்டிஓ அலுவலகத்தில் புதன்கிழமை பைக்கை நிறுத்திச் சென்ற ஆசிரியருக்கு வியாழக்கிழமை ஆர்.சி. புத்தகம் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகாவைச் சேர்ந்த கருர் இளம்பாவயலைச் சேர்ந்த ஆசிரியர் அ. செல்வராஜ் கடந்த ஜனவரி மாதம் ஆவுடையார்கோவிலில் வாங்கிய இருசக்கர வாகனத்தை மார்ச் மாதம் பதிவு செய்து விட்டு கடந்த 5 மாதங்களாக ஆர்.சி. புத்தகம் கேட்டு அலைந்தபின் விட்டு புதன்கிழமை மாலை ஆர்டிஓ அலுவலகத்தில் வண்டியை நிறுத்திவிட்டு சாவியை அலுவலக ஊழியரிடம் கொடுத்துவிட்டு ஆர்.சி. புத்தகம் வந்தவுடன் வண்டியை எடுத்துக் கொள்கிறேன் எனக் கூறிச் சென்றார்.
இதுகுறித்து ஆய்வு செய்த அறந்தாங்கி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் (பொ) சு. அசோக்குமார் மார்ச் 20-ஆம் தேதியே அப்போதைய அலுவலரால் கையொப்பம் இட்ட ஆர்.சி. புத்தகம் இருந்ததைக் கண்டுபிடித்து ஆசிரியர் அ. செல்வராஜிடம் தெரிவித்தன் பேரில் அவர் வியாழக்கிழமை நேரில் வந்து ஆர்.சி. புத்தகத்தை பெற்றுச் கொண்டார்.
இதுகுறித்து வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் க.அசோக்குமார் கூறுகையில் அந்த ஆசிரியர் ஆவுடையார்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்திலேயே கேட்டு விட்டுச் சென்றுவிட்டார். இது ஏற்கெனவே கையொப்பம் இட்ட ஆர்.சி, புத்தகம் என்ற சரியான புரிதல் இல்லாததால் இந்தத் தவறு நடந்துள்ளது. இனிமேல் அலுவலக புகார் புத்தகத்தில் வாடிக்கையாளர்கள் குறைகளை எழுதினால் குறைகள் உடனுக்குடன் சரிசெய்யப்படும் என்றார்.