அறந்தாங்கியில் இரண்டரை வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பிளஸ் 2 மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மணிவிளான் தெருவில் உள்ள தம்பதியரின் இரண்டரை வயது பெண் குழந்தையை, அதே குடியிருப்பின் மேல்தளத்தில் வசிக்கும் பிளஸ் 2 மாணவர் சில நாள்களுக்கு முன்பு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.
இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோர் மருத்துவரிடம் காண்பித்துள்ளனர். அப்போது, சிறுமியை பாலியல் ரீதியாக மாணவர் தொந்தரவு செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அறந்தாங்கி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து விசாரணைக்கு மாணவரை அழைத்து வர போலீஸார் சென்ற போது வீட்டை பூட்டி விட்டு அனைவரும் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரைத் தேடி வருகின்றனர்.