தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறைகேடுகளை களைய வலியுறுத்தி திருவரங்குளத்தில் இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவர் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தார்.
திட்டத்தில் பதிவுசெய்துள்ள பயனாளிகளுக்கு நூறு நாள்கள் வேலை வழங்க வேண்டும். வேலை வழங்கப்படாத நாள்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
செய்த வேலைக்கு நிலுவையில்லாமல் வாரந்தோறும் ஊதியம் வழங்க வேண்டும். வங்கியில் வாங்கிய வேறு கடன்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு வழங்கப்பட்ட ஊதியத்தில் பிடித்தம் செய்யக்கூடாது. வேலை கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் புதிய வேலை அட்டை வழங்க வேண்டும். கூலியாக ரூ.224 வழங்க வேண்டும். திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
சங்கத்தின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் குமாரவேல், மாவட்டத் தலைவர் பாலசுப்ரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.உடையப்பன், ஒன்றியச் செயலாளர் வடிவேல் மற்றும் 100க்கும் அதிகமான பெண்கள் பங்கேற்றனர்.