பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூர் ஊராட்சியில் பேருந்து வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னமராவதியில் இருந்து தூத்தூர் வழித்தடத்தில் மூன்று பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தநிலையில், கடந்த 2, 3 ஆண்டுகளாக பேருந்துகள் இயக்கப்படாமல் மாற்றுப்பாதையில் சென்று வந்தன.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட
அதிகாரிகளிடம் பல முறை வலியுறுத்தியும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், கொப்பனாபட்டி-- ஆலவயல் சாலைப்பணிகள் நடைபெறுவதால் பேருந்துகள் தூத்தூர் வழித்தடத்தில் இயக்கப்பட்டது. இதனைக்கண்ட பொதுமக்கள் தொடர்ந்து தூத்தூர் வழித்தடத்தில் பேருந்துகளை இயக்கக்கோரி பேருந்துகளை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த பொன்னமராவதி காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியலை கைவிட்டனர்.