புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், கவரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் கல்விச் சீர் கொண்டு வந்து பள்ளிக்கு சனிக்கிழமை அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம் கவரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது..
விழாவிற்கு பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் காளமேக கவுண்டர் தலைமையில் முன்னாள் மாணவர்கள், கிராமக் கல்விக் குழுவினர் இணைந்து பள்ளிக்கு தேவையான மின் விசிறி, பீரோ, மேஜை, நாற்காலி, சாக்பீஸ், பேப்பர், கம்யூட்டர் டேபிள், விளையாட்டு பொருள்கள், குப்பைத் தொட்டி, குடம், தட்டு, டம்ளர் உள்ளிட்ட பொருள்களை ஊர்வலமாக கொண்டு வந்து கல்விச் சீராக பள்ளிக்கு வழங்கினர்.
விழாவில் தலைமையாசிரியர் ஆர். சிவக்குமார், உதவித் தலைமையாசிரியர் ராஜகோபால், விராலிமலை வட்டார வளமைய மேற்பார்வையாளர் புவனேஸ்வரி, வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் அ.நார்பெரத் பீலீஸ் மற்றும் கல்வித் தொலைக்காட்சி மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் கு.முனியசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதேபோல் அன்னவாசல் ஒன்றியம் குளவாய்ப்பட்டி, ஆணைப்பட்டி தொடக்கப்பள்ளிக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் கல்வி சீர் வழங்கப்பட்டது.
பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூர் ஊராட்சி அண்ணாநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கல்விச்சீர் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு, வட்டாரக்கல்வி அலுவலர் ராஜா சந்திரன் தலைமை வகித்தார். வட்டாரக்கல்வி அலுவலர் பால்டேவிட் ரொசாரியோ, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆர்.செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் வெ.கவிதா வரவேற்றார்.
விழாவில், கிராம சமுதாயக் கூடத்திலிருந்து பெற்றோர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மடிக்கணினி, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், மேஜை, நாற்காலி, ஒலிப்பெருக்கி மற்றும் கற்றல் உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கினர். ஆசிரியர் பயிற்றுனர் பரிசுத்தம், அன்பழகன், ரோகினி, மதனகுமார், முன்னாள் மாணவர் பிரதிநிதி சோமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் ராசு நன்றி கூறினார்.