புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் மாசி மகத் திருவிழாவையொட்டி, அங்குள்ள 33 அடி உயர குதிரை சிலைக்கு மாலை அணிவித்து பக்தர்கள் செவ்வாய்க்கிழமை வழிபாடு நடத்தினர்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசிமகத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதற்காக கடந்தவாரம் காப்புக் கட்டுதல் நடைபெற்றது. தொடர்ந்து முக்கிய நிகழ்வாக, அய்யனாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, புதுகை, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மாலைகளோடு வந்த பக்தர்கள் குதிரை சிலைக்கு மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம் நடைபெற்றது.திருவிழாவில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.