புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள பனங்குளம் கிழக்கு அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையைக் கண்டித்து மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் வியாழக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
பனங்குளம் கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை காலை பள்ளிக்கு சென்ற தலைமை ஆசிரியை ஜோதி, அப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் பணிசெய்துவந்த ஆசிரியையைப் பணிக்கு வரவேண்டாமெனக்கூறி அனுப்பிவிட்டாராம்.
இதுகுறித்து, தகவலறிந்து பள்ளிக்குச் சென்று பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், தலைமை ஆசிரியை இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் தலைமை ஆசிரியை ஜோதியைக் கண்டித்து தர்னாவில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற திருவரங்குளம் வட்டார கல்வி அலுவலர் நடராஜன் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.