புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டினத்தில் நிகழ்ந்த கொலை வழக்கில் 28 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்தவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், முதுமொத்தமொழியைச் சேர்ந்தவர் மா. ஆசீர்வாதம். இதுபோல, நாங்குநேரி வட்டம், சிதம்பரபுரம் தெற்கு கருங்குளத்தைச் சேர்ந்தவர் வை. வேலாயுதபெருமாள். இவர்கள் இருவரும் கோட்டைப்பட்டினம் இக்பால் தெருவில் வசித்து வந்தனர். ஆசீர்வாதம் மகள் ரெபேக்காளை கடந்த 1991, அக்.24 ஆம் தேதிவேலாயுதபெருமாள் கேலி கிண்டல் செய்தாராம். இதை ஆசீர்வாதம் தட்டிக் கேட்டபோது அவரை வேலாயுதபெருமாள் கத்தியால் குத்தியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தடுக்க வந்த ஆசீர்வாதம் மனைவி முனியம்மாவையும் கத்தியால் குத்தியதால் கையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்த வழக்கு அறந்தாங்கி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் வேலாயுதபெருமாள் தப்பியோடிவிட்டாராம். 28 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருக்கும் வேலாயுதபெருமாளை கைது செய்யுமாறு காவல் கண்காணிப்பாளர் எஸ். செல்வராஜ் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து கோட்டைப்பட்டினம் டி.எஸ்.பி. காமராஜ் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான தனிப்படை குழுவினர் கடந்த 2 மாதங்களாக தேடி வந்தனர். ஈரோடு மாவட்டம், நம்பியூர் சொர்ணமடம் பகுதியில் தங்கியிருந்த வேலாயுதபெருமாளை (69) தனிப்படையைச் சேர்ந்த நாகராஜன், ராஜகோபால் உள்ளிட்டோர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.