பொதுத்தேர்வுகளைச் சந்திக்கும் மாணவ, மாணவிகள் சிரமப்பட்டு படிக்க வேண்டியதில்லை, கவனமாகப் படித்தால் போதும் என்றார் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா. வனஜா.
புதுக்கோட்டை செந்தூரான் கல்வி நிறுவன வளாகத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற எஸ்எஸ்எல்சி மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:
கல்லை உளியால் செதுக்கும்போதுதான் அழகான சிலை கிடைக்கும். மாணவர்களைச் செதுக்கும் உளியாகத்தான் ஆசிரியர்கள் செயல்படுகிறார்கள். எப்போதும் நமக்குப் பாடம் சொல்லித்தந்த ஆசிரியர்களையும், சீராக வளர்த்து வரும் பெற்றோரையும் மறக்கக் கூடாது. பொதுத்தேர்வுகளைப் பொருத்தவரை மிகவும் சிரமப்பட்டு படிக்க வேண்டியதில்லை. ஆனால், கவனத்தோடு படித்தால் போதும். தேர்வு அறையில் வினாத்தாளைக் கொடுத்தவுடன் பொறுமையாகப் படித்து, கவனமாக சரியாக விடையளியுங்கள். அவசரப்பட வேண்டாம் என்றார் அவர்.
நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் ஏவிஎம் செல்வராஜ் தலைமை வகித்தார். முதன்மைச் செயல் அலுவலர் எஸ். கார்த்திக் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர் வி.எம். கண்ணன் உள்ளிட்டோரும் பேசினர். முடிவில் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொருளாளர் தென்னரசு நன்றி கூறினார்.