புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வீட்டில் உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயக்கம் ஏற்பட்டு தாயும்-மகளும் உயிரிழந்ததனர்.
அறந்தாங்கி அருகிலுள்ள திருநாளூர் வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி தாமரைச்செல்வி (32).இவர்கள் இருவரும் அரவக்குறிச்சியில் உணவகத்தில் வேலை பார்த்து வந்தனர்.
இவர்களது மகள் தர்ஷினி (12), வடக்கிகாட்டிலுள்ள தனதுபாட்டி வீட்டில் தங்கி ஆவணத்தான்கோட்டை அரசுப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
பொங்கல் பண்டிகைக்காக ஊருக்கு வந்திருந்த சேகர், தாமரைச் செல்வி தங்கள் மகள் தர்ஷினியையும் அழைத்து வந்து பண்டிகையைக் கொண்டாடியுள்ளனர்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு அனைவரும் குடும்பத்துடன் உணவு சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் தர்ஷினி, தாமரைச் செல்வி ஆகிய இருவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் இருவரும் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி தாயும், மகளும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அறந்தாங்கி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வியாழக்கிழமை இரவு சேகர் குடும்பத்தினர் இறைச்சி சாப்பிட்டதாகவும், அதனால் ஒவ்வாமை ஏற்பட்டதால் இந்த உயிரிழப்பு நிகழ்ந்திருக்கலாம் என அவர்களது உறவினர்கள் கூறுகின்றனர். எனினும் போலீஸார் விசாரிக்கின்றனர்.