விராலிமலையில் இன்று உலக சாதனைக்காக ஜல்லிக்கட்டு: முதல்வர், துணை முதல்வர் தொடக்கி வைக்கின்றனர்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உலக சாதனை முயற்சியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டை

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உலக சாதனை முயற்சியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடக்கி வைக்கவுள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு 2 ஆயிரம் காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்கவுள்ளன.
மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்று, காளைகளை அடக்கி வெற்றி பெறுவோருக்கு சிறப்புப் பரிசுகளாக கார்கள், மோட்டார் சைக்கிள்கள், மிதிவண்டிகள், தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள், பீரோ, கட்டில், கிரைண்டர், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருள்களும் வழங்கப்படவுள்ளன.
விராலிமலை அம்மன் குளத்தில் ஸ்ரீ பட்டமரத்தான் கருப்புசாமி கோயில் வாடிவாசல் மற்றும் குளப்பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
பார்வையாளர்கள் பாதுகாப்புடன் அமர்ந்து பார்க்கவும், மாடுபிடி வீரர்கள் குறித்த விவரமும் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டு உரிய அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல, மாநிலம் முழுவதுமிருந்து பங்கேற்கவுள்ள காளைகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறையினரின் பரிசோதனைக்குப் பிறகு உரிய அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 
சிறந்த வீரர்களைத் தேர்வு செய்வதற்காக 75 நடுவர் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இதுவரை நடைபெற்ற ஜல்லிக்கட்டை விடவும் அதிக எண்ணிக்கையில் காளைகளும், மாடுபிடி வீரர்களும், பரிசுகளும் வழங்கப்படவுள்ளதால் உலக சாதனைப் பட்டியலில் இதனைச் சேர்க்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக லண்டனில் இருந்து இருவர் பார்வையாளர்களாகப் பங்கேற்கவுள்ளனர்.
காலை 7 மணிக்கு மாநில முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டைத் தொடக்கி வைக்கின்றனர். இவர்களுடன் சுமார் 10 அமைச்சர்கள், 15 எம்பிக்கள், 40 எம்எல்ஏக்கள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக 4 மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், 25 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 50 காவல் ஆய்வாளர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ், காவல் கண்காணிப்பாளர் ச. செல்வராஜ் உள்ளிட்டோர் தொடர்ந்து அம்மன் குளத்தில் முகாமிட்டு ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகளைக் கண்காணித்து வருகின்றனர். விழாவில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளர்கள், மாடு பிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்பட அனைவருக்கும் உணவு ஏற்பாடுகளும், மோர், பழச்சாறு உள்ளிட்டவற்றையும் இலவசமாக வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பட்டமரத்தான் கருப்புசாமி கோயில் விழாக்குழுவினர் தெரிவித்தனர்.
அதேநேரத்தில் இந்த வளாகத்திலேயே ஆவின் நிறுவனம் சார்பில் தேநீர், காபி, பால் உள்ளிட்ட ஆவின் பொருள்களை விற்பனை செய்யவும் சிறப்பு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. 
இந்த விழாவுடன் சேர்த்து புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 518 வாடிவாசல்கள் உள்ளதாகவும், வேறெந்த மாவட்டத்திலும் இதுபோன்ற ஜல்லிக்கட்டு விழாவுக்கான வாடிவாசல்கள் இந்த எண்ணிக்கையில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியை சனிக்கிழமை பார்வையிட்டு, அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கேட்டறிந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com