அறந்தாங்கி அருகே பயிர்க் காப்பீடு நிவாரணத் தொகை பாரபட்சமின்றி வழங்க வலியுறுத்தி, விவசாயிகள் சார்பில் திங்கள் கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அறந்தாங்கி அருகே நாகுடி கடைவீதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஏரிப் பாசன விவசாயிகள் சங்கம் அறந்தாங்கி வட்டம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றியத் தலைவர் வி.லெட்சுமணன் தலைமை வகித்தார். 2016 - 17, 2017 - 18 ஆம் ஆண்டில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி டெல்டா பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரே மாதிரியான காப்பீடு-இழப்பீட்டுத் தொகை வழங்காமல் பாரபட்சமாக வழங்குவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். கவிவர்மன், விவசாய சங்க மாவட்டத் தலைவர் எஸ். பொன்னுச்சாமி, விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆ.பாலசுப்பிரமணியன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கர்ணா, கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர்கள் அறந்தாங்கி தென்றல் கருப்பையா, ஆவுடையார்கோவில் முருகேஷ், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் மேகவர்னம் ஆகியோர் பங்கேற்றனர்.