புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனியார் பேருந்தில் இருந்து புதன்கிழமை தவறி விழுந்த அரசு ஊழியர் உயிரிழந்தார்.
மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் டி. சரவணன் (55). திருவரங்குளம் வட்டார வேளாண் விரிவாக்க மைய மேலாளர்.
இந்நிலையில், புதன்கிழமை ஆலங்குடி வட்டாட்சியரகத்தில் நடைபெற்ற தேர்தல் தொடர்பான பயிற்சிக்கு செல்ல வம்பன் 4 சாலையில் இருந்து தனியார் பேருந்தில் ஏறியுள்ளார்.
அப்போது, பேருந்து புறப்பட்டு அருகில் இருந்த வேகத்தடையில் ஏறி இறங்கியபோது பேருந்தில் இருந்து விழுந்து பலத்த காயமடைந்தார்.
புதுகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து ஆலங்குடி போலீஸார் வழக்கு பதிந்து பேருந்து ஓட்டுநர் தஞ்சை மாவட்டம், பாப்பாநாட்டைச் சேர்ந்த முத்தையா மகன் கார்த்திக்கை (31) கைது செய்து விசாரிக்கின்றனர்.