தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற குழந்தைகள் திருவிழாவில் 80 பேருக்கு இளந்தளிர் விருது ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
தேசிய குழந்தைகள் தினம் மற்றும் உலக பாரம்பரிய வாரத்தையொட்டி, இளந்தளிர் - 2018 என்கிற குழந்தைகள் திருவிழா டிச. 5-ம் தேதி தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்றது. தஞ்சாவூர் கலைஆயம், இன்டாக் அமைப்பு, தென்னகப் பண்பாட்டு மையம், தமிழ்நாடு அரசுக் கலை, பண்பாட்டுத் துறை, சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் ஆகியவை சார்பில் நடைபெற்ற இத்திருவிழாவின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இதில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் 80 பேருக்கு இளந்தளிர் விருது வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
விழாவில் தென்னகப் பண்பாட்டு மைய இயக்குநர் பாலசுப்பிரமணியன், துணை இயக்குநர் ஜோசப் தைரியராஜ், சுற்றுலா அலுவலர் இளங்கோவன், கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் குணசேகரன், தென்னகப் பண்பாட்டு மைய நண்பர்கள் குழுத் தலைவர் வி. வரதராஜன், கலை ஆயம் செயலர் எஸ். முத்துக்குமார், இன்டாக் உறுப்பினர் அபாஜி ராஜா பான்ஸ்லே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.