தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் காவல் சரகம், மேலகபிஸ்தலம் கிராமம், கொத்ததெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி(65). இவரது மனைவி மணிமேகலை (60). இவர்கள் அந்தப் பகுதியில் டீ கடை நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கும், அருகே வசித்து வரும் பாபுராஜ் (40), திவான்பாபு(27) ஆகியோருக்குமிடையே இடப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், அண்மையில் பாபுராஜ், திவான்பாபு ஆகிய இருவரும் பிரச்னைக்குரிய இடத்தை சுத்தம் செய்தனராம். அப்போது, ராமமூர்த்தி, மணிமேகலை, அவர்களின் மகள் விஜயலெட்சுமி ஆகியோர், இந்த இடம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளபோது ஏன் தூய்மை செய்கிறீர்கள் என கேட்டனராம்.
இதில் ஆத்திரமடைந்த பாபுராஜ், திவான்பாபு ஆகிய இருவரும் ராமமூர்த்தி, அவரது மனைவி மணிமேகலை ஆகியோரை தாக்கினார்களாம். காயமடைந்த இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்த புகாரின்பேரில், கபிஸ்தலம் போலீஸார் வழக்குப் பதிந்து பாபுராஜ், திவான்பாபு ஆகிய இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
இதேபோல், எதிர்தரப்பைச் சேர்ந்த பாபுராஜ் மனைவி ராணி என்பவர் அளித்த புகாரின்பேரில், ராமமூர்த்தி, மணிமேகலை, விஜயலெட்சுமி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப் பதிந்து மூவரையும் தேடி வருகின்றனர்.